Published : 18 Mar 2014 06:19 PM
Last Updated : 18 Mar 2014 06:19 PM

இது எம் மேடை: வீணாகும் அரிசி, கோதுமை மானிய விலையில் வேண்டும்

ஆர். நல்லதம்பி - தலைவர், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம்:

நாமக்கல்லில் விவசாயம் சார்ந்த கோழிப்பண்ணைத் தொழில், சில ஆண்டுகளாக நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. தீவன மூலப்பொருட்களான சோயா, மக்காச்சோளம், தவிடு, கருவாடு, கம்பு, சோளம் போன்றவை கடந்த சில ஆண்டுகளில் 100% விலை ஏறியுள்ளது. புரோக்கர்கள் செயற்கையாக சோயா தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதால், கூடுதல் விலை கொடுத்து வாங்குகிறோம். இந்தியாவில் சோயாவின் தேவை மிகுதியாக இருக்கும் நிலையிலும் அது ஏற்றுமதியாகிறது. ஏற்றுமதியைத் தடைசெய்தால் விலை குறையும்.

மேற்கண்ட காரணங்களால் முட்டையின் உற்பத்திச் செலவு கூடுகிறது. ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 320 - 325 காசுகள் செலவாகின்றன. இதற்கு மேல் விலை கிடைத்தால் மட்டுமே பண்ணையாளர்களுக்கு லாபம். 2012-2013-ல் ஒரு கோழிக்கு 50 ரூபாய் வரை இழப்பைச் சந்தித்தோம். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசு உணவுக் கழகங்களின் சேமிப்புக் கிடங்குகளில் வீணாகும் கோதுமை, அரிசி உள்ளிட்டவற்றை மானிய விலையில் கேட்டோம். இந்த நடைமுறை 2003-04 மற்றும் 2006-07ல் இருந்ததுதான். ஆனால், இதுவரை பதிலே இல்லை.

முட்டையைப் பொறுத்தவரை ஆண்டின் மூன்று மாதங்கள் நல்ல விலை கிடைக்கும். அடுத்த ஆறு மாதங்களுக்கு முட்டை விலை சீராக இருக்கும். மீதமுள்ள மூன்று மாதத்தில் விலையில் கடும் சரிவு இருக்கும். இதற்குத் தீர்வுகாண முட்டை குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும். 10 கோடி முட்டைகள் வைக்கும் குளிர்பதனக் கிடங்கு அமைக்க 15 கோடி ரூபாய் செலவாகும். இதனால், மூன்று மாதங்கள்வரை முட்டைகளைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x