Published : 13 Mar 2014 07:13 PM
Last Updated : 13 Mar 2014 07:13 PM

இது எம் மேடை: 72 ஆண்டுகளாக ரயில் பாதைக்கு ஏங்கும் கிருஷ்ணகிரி மக்கள்!

டி.சந்திரசேகரன் - கிருஷ்ணகிரி மாவட்ட ரயில் மற்றும் பஸ் பயணிகள் நலச் சங்க இணைச் செயலாளர் :

ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி - ஓசூர் ரயில்வே திட்டம் நிறைவேறு வது எப்போது என்பதே தொகுதி மக்களின் பிரதான எதிர்பார்ப்பு. கிருஷ்ணகிரியிலிருந்து சென்னை மற்றும் வெளியூர்களுக்கு ரயிலில் செல்ல வேண்டுமெனில், ஜோலார்பேட்டை அல்லது தருமபுரிக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால், ஒரு தலைமுறைக்கு முன்பு இங்கும் ரயில் ஓடிய வரலாறு இருக்கிறது.

1896-ம் ஆண்டு ஜோலார்பேட்டை - திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி வரை 38 கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, 1905-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி பணி நிறைவடைந்தது. இத்தடத்தில் ஐந்து ரயில் நிலையங்கள் செயல்பட்டன. ஆனால், போதிய வருவாய் இல்லாததால் 1942 -ம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை சுமார் 72 ஆண்டுகளாக, கிருஷ்ணகிரி மக்களுக்கு ரயில் வசதி என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, 2008-ம் ஆண்டு ரூ.558.24 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், திட்டத்தைத் தொடங்காமல் இழுத்தடித்தால் தற்போதைய நிலவரப்படி இந்தத் திட்டத்தின் மதிப்பீடு ரூ.1,000 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு முறை தேர்தலின்போதும் நாடாளுமன்ற வேட்பாளர்கள் இதனைப் பிரதான வாக்குறுதியாகச் சொல்லி வோட்டு கேட்கிறார்கள். ஆனால், வெற்றி பெற்ற பின்பு மறந்துவிடுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x