Published : 08 Apr 2014 12:00 AM
Last Updated : 08 Apr 2014 12:00 AM

நள்ளிரவிலும் மின்வெட்டு அமல்: புழுக்கத்தில் தவிக்கும் மக்கள்; புதிய நிலையங்கள் கைகொடுக்காததால் அதிகாரிகள் கவலை

கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் நள்ளிரவிலும் மின்வெட்டு அமலாவதால் புழுக்கத்தில் மக்கள் தூக்கமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய மின் நிலையங்கள் எதிர்பார்த்த உற்பத்தியை தராததே மின்வெட்டுக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் வழக்கம்போல், இந்த ஆண்டும் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தி தாமதமாவதால், நிலைமையை சமாளிக்க முடியாமல் மின்வாரிய அதிகாரிகள் தவிக்கின்றனர். இதனால் மின் வெட்டை அமல்படுத்தி வருகின்றனர்.

தற்போது, தமிழக மின் தேவையில் சுமார் 1,500 மெகாவாட் அளவுக்கு மின் சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க, வீடுகள் மற்றும் கடைகளுக்கு ஆயிரம் மெகாவாட் வரை மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால் தினமும் பகலி 2 முதல் 3 மணி நேரம் வரை மின்சார விநியோகம் தடைபடுகிறது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இரவு நேரத்திலும் மின்வெட்டு அமல் படுத்தப்படுகிறது. நள்ளிரவில் மின்சாரம் நிறுத்தப்படுவதால், புழுக்கத்தில் மக்கள் தூக்கமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திங்கள்கிழமை அதிகாலை நிலவரப்படி, சுமார் 1,100 மெகாவாட் மின்சாரம் தடை செய்யப்பட்டது. காற்றாலை மின்சாரம் ஒரு மெகாவாட் அளவுக்குக்கூட உற்பத்தி யாகவில்லை. இதுகுறித்து மின் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேட்டூர் புதிய மின் நிலையம், வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கம் மற்றும் நெய்வேலி 2-ம் நிலை விரிவாக்கம் ஆகிய நிலையங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மின் உற்பத்தி நடக்கவில்லை. அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதால், மின் உற்பத்தி தடைபடுகிறது.

ஏப்ரல் இறுதியில் காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். அதுவரை இந்த நிலை நீடிக்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x