Published : 26 Apr 2014 10:43 AM
Last Updated : 26 Apr 2014 10:43 AM

பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்து சோனியா தியாகம் செய்யவில்லை: ராஜ்நாத் சிங்

பிரதமர் பதவியை மன்மோகன் சிங்குக்கு விட்டுக்கொடுத்ததால் சோனியா காந்தி ஒன்றும் பெரிய தியாகம் செய்துவிடவில்லை என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரங்காபாத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ராஜ்நாத் சிங் பேசியதாவது: "கடந்த 2004 மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்ததால் சோனியா காந்தி எந்த தியாகமும் செய்துவிடவில்லை.

"தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்" என்ற புத்தகத்தை எழுதியுள்ள பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய பருவா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை சோனியா காந்தி தான் நடத்தி வந்ததாக கூறியுள்ளார். அந்த புத்தகத்தில் மத்திய அரசை சோனியா காந்தி தான் நடத்தினார் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.

காங்கிரஸ் மீது தாக்கு:

பாஜ கட்சி மதவாத கட்சி என காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. மேலும், சமுதாயத்தை பாஜக பிரித்தாள முயற்ச்சிப்பதாகவும் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், உண்மையில் சோனியா காந்தி வரலாறு தெரியவில்லை. இந்தியப் பிரிவினைக்குக் காரணம் பாரதிய ஜனதா கட்சி அல்ல, காங்கிரஸ் கட்சியே.

கட்சிக்குள் வேறுபாடு இல்லை:

நரேந்திர மோடி, பாஜக பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதில் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை என்று கூறிய ராஜ்நாத் சிங். கட்சியின் மூத்த தலைவர்களுடன் தீர கலந்து ஆலோசித்த பிறகே மோடி பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார் என ராஜ்நாத் சிங் கூறினார்.

பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகும். ஆனால், காங்கிரஸ் கட்சி பாரதி ஜனதா கட்சி குறித்து தவறாக சித்தரித்து மக்கள் ஆதரவை பெற முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார்.

கடந்த 10 ஆண்டுகளில் பணவீக்கம் விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்துள்ளது என்றும் ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x