Published : 12 Apr 2014 12:44 PM
Last Updated : 12 Apr 2014 12:44 PM

ஆசம் கான் மீது 2 வழக்குகள் பதிவு

கார்கில் போர் குறித்து சர்ச்சைக் குரிய வகையில் பேசிய சமாஜ் வாதி மூத்த தலைவர் ஆசம் கான் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரை வென்றுக் கொடுத்தது முஸ்லிம் ராணுவ வீரர்கள்தான் என்று அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உத்தரப் பிரதேச அமைச்சர் ஆசம் கான் பேசினார்.

இதையடுத்து உத்தரப் பிரதேசத் தில் பிரச்சாரம் செய்யவும் பொதுக் கூட்டத்தில் பேசவும் ஆசம் கானுக்கு தேர்தல் ஆணையம் நேற்றுமுன்தினம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது காஜியாபாத் போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மதம், இனரீதியாக விரோ தத்தை வளர்க்கும் வகையில் பேசியது தொடர்பான சட்டப் பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஆசம் கானுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யும் முன்பு போலீஸ் அதிகாரிகளின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு வழக்கு பதிவு

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் ஆசம் கான் பேசிய போது, முசாபர்நகர் கலவர கொலையாளிகளை பழிவாங்கும் வகையில் வாக்குப் பதிவு இயந்திர பொத்தான்களை அழுத்துங்கள் என்று பேசினார்.

இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ் பாண்டே அளித்த புகாரின் பேரில், சம்பல் பகுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆசம்கான் பேட்டி

இந்த விவகாரம் குறித்து ராம்பூரில் நிருபர்களிடம் ஆசன் கான் கூறியதாவது:

இந்த நாட்டுக்காக முஸ்லிம்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர் என்றுதான் நான் கூறினேன். இதில் என்ன தவறு இருக்கிறது. என்னுடைய பேச்சால் சமூக நல் லிணக்கம்தான் அதிகரிக்கும்.

நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறேன். மிக எளிமையாக வாழ்கிறேன். என்னைவிட சிறந்த தேசியவாதி யாருக்கும் இருக்க முடியாது.

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பு அளிக்கவில்லை, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை முதிர்ச்சியற்ற செயல் என்று அவர் குற்றம்சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x