Published : 22 Apr 2014 09:48 AM
Last Updated : 22 Apr 2014 09:48 AM

குஜராத்தில் முஸ்லீம்களுக்கு இடமளிக்காத பாஜக, ஆம் ஆத்மி

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக சென்ற போது அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தில் ஓரிரு முஸ்லீம் முகங்கள் இருந்தன ஆனால் மாநிலத்தில் 26 நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு தொகுதியை கூட பாஜக, சிறுபான்மை முஸ்லீம் சமூக வேட்பாளரை நிறுத்தவில்லை.

இது குறித்து பாஜக ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷத் படேல் கூறியதாவது: "மதம், இனம் அடிப்படையில் பாஜக வேட்பாளர்களை தெரிவு செய்வதில்லை. மாறாக கட்சிக்காக அவர்கள் ஆற்றிய தொண்டையும், வெற்றி வாய்ப்பையும் கருத்தில் கொண்டே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஏன், எல்.கே.அத்வானி சிந்தி எனும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் தானே. கட்சியின் உள்ளூர் தலைவர்கள் தேர்வு செய்து அனுப்பும் பட்டியலில் இருந்தே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்". இவ்வாறு அவர் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியும் இதற்கு விதிவிலக்கில்லை என்பது போல், போட்டியிடும் 23 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியுல் கூட முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தவில்லை. இது குறித்து ஆம் ஆத்மி கட்சி மாநில செய்தித்தொடர்பாளர் ஹர்ஷல் நாயக் கூறுகையில், எங்களுக்கு ஏற்ற வேட்பாளர் கிடைக்கவில்லை. இருப்பினும் 2 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு முஸ்லீம் வேட்பாளர்கள் இருவரை களம் இறக்கியுள்ளோம், என்றார்.

ஒரே ஒரு வேட்பாளர்

மக்களவை தேர்தலில் குஜராத் மாநிலத்தில் போட்டியிடும் ஒரே ஒரு முஸ்லீம் வேட்பாளர் மக்சூத் மிர்சா. இவர் காங்கிரஸ் கட்சி சார்பில். நவ்சாரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

2001 குஜராத் மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மாநிலத்தின் 9.5% பேர் முஸ்லீம்கள். இருப்பினும், நாடாளுமன்றத்தில் குஜராத் மாநில முஸ்லீம்கள் பிரதிநிதித்துவம் பல ஆண்டுகளாக பூஜ்யமாகவே இருக்கிறது.

ஜாம்நகர், பரூச், நவ்சாரி, கச் ஆகிய மக்களவை தொகுதிகள் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளாகும். இவற்றில் 3 தொகுதிகள் பாஜக வசம் உள்ளன. ஜாம்நகர் தொகுதி மட்டும் காங்கிரசிடம் உள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் குஜராத் சட்டமன்றத்தில் முஸ்லீம்கள் பங்களிப்பு குறித்து சமூக ஆர்வலர் ஹனீப் லக்டாவாலா கூறுகையில், "குஜராத் மாநிலத்தில் இருந்து கடைசியாக தேர்வான முஸ்லீம் எம்.பி.அகமது படேல். 1984-ம் ஆண்டு அகமது படேல் தேர்வானார். அதன் பிறகு நாடாளுமன்றத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் கூட இடம் பெறவில்லை. இதே போல் சட்டசபையிலும் முஸ்லீம்கள் பிரதிநிதித்துவம் படிப்படியாக குறைந்து விட்டது. முன்னதாக முஸ்லீம் சமூகத்தில் இருந்து 10 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இப்போது 5 முஸ்லீம் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்.

பாஜகவில் உள்ள முஸ்லீம்கள் தங்கள் சமூகத்தினர் மத்தியிலியே செல்வாக்கு பெறவில்லை. இதன் காரணமாக மாநகராட்சி தேர்தல்களில் கூட அவர்கள் வெற்றி பெற முடிவதில்லை. மோடி, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய சத்பாவனா விரதம் வெறும் சம்பிரதாயம்.

அகமதாபாத் ஜுஹாபுராவில் முஸ்லீம் மக்கள் 4 லட்சம் பேர் உள்ளனர். ஆனால், கடந்த 2006-ல் நடந்த தொகுதி மறுசீரமைப்பில் அரசியல் கொள்கைகளுக்கு ஏற்ப இப்பகுதி பிரிக்கப்பட்டது. இதன் காரணமாக முஸ்லீம் வாக்குகள் சிதறின". இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x