Published : 25 Apr 2014 02:29 PM
Last Updated : 25 Apr 2014 02:29 PM

பிரதமருக்கு கிட்டப்பார்வை கோளாறு: அருண் ஜேட்லி தாக்கு

'மோடி அலை' தெரியவில்லை என்றால் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கண்களில் கிட்டப்பார்வை கோளாறு இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களவை தேர்தலை ஒட்டி, அசாம் மாநிலம் திஸ்பூரில் நேற்று (வியாழக்கிழமை) வாக்களித்த பிரதமர் மன்மோகன் சிங், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது: "தேசத்தில் 'மோடி அலை' வீசவில்லை. அப்படி ஒன்று இருப்பதாக ஊடகங்கள்தான் மிகைப்படுத்துகின்றன. காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்றுவிடும் என கூறப்படுகிறது, அதற்கு சாத்தியம் இல்லை. மே 16-ம் தேதி தேர்தல் முடிவுகள் வரை காத்திருங்கள். காங்கிரஸ் பெரும்பான்மை பெறும்" என கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரதமரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, "மோடி அலை தெரியவில்லை என்றால் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கண்களில் கிட்டப்பார்வை கோளாறு இருக்க வேண்டும். இல்லை என்றால் மோடி அலையை அவர் பார்த்தும் அதனை ஏற்றுக் கொள்ளமுடியாமல் அவ்வாறு கூறியிருக்க வேண்டும்.

நரேந்திர மோடிக்கு உள்ள ஆதரவை பார்த்து சோனியா காந்தியும், ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியும் குழப்பத்தில் இருக்கின்றனர்.

ஆட்சி அரியணையில் இருந்து இறங்கவுள்ள ஒரு அரசு தனது சாதனைகளைச் சொல்லி கரை சேர முயற்சிக்காமல் எதிர்கட்சியை குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதை முதல் முறையாக பார்க்கிறேன்.

நரேந்திர மோடி நல்லாட்சிக்கான திட்டத்தை வகுத்து அதன்படி வெற்றிகரமாக செயல்படுகிறார். நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களிலும் மோடிக்கு ஆதரவு வலுத்துள்ளது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை வீசுகிறது". இவ்வாறு அருண் ஜேட்லி பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x