Published : 04 Apr 2014 08:29 PM
Last Updated : 04 Apr 2014 08:29 PM

காங்கிரஸுக்கு டெல்லி ஜும்மா மசூதி இமாம் ஆதரவு

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்போம் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சயீது அகமது புகாரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அண்மையில் சயீது அகமது புகாரியை சந்தித்துப் பேசினார். அதன்பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த சயீது, முஸ்லிம்கள் வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்று சோனியா தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார். இந்த விவகாரம் தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜும்மா மசூதி இமாம் சயீது அகமது புகாரி டெல்லியில் நிருபர்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி மீது சில விஷயங்களில் எங்களுக்கு அதிருப்தி உள்ளது. எனினும் மதவாத சக்திகளிடம் நாடு சிக்கிவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளேன்.

மதவாத சக்திகளால் நாடு பேராபத்தை எதிர்கொண்டுள்ளது. நாட்டைப் பிளவுபடுத்த அந்த சக்திகள் நாள்தோறும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனவே மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கி றோம். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம். அங்கு திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்போம்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையமாட்டோம் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதன்காரணமாகவே அவரை ஆதரிக்கிறோம். மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதில் மம்தா பானர்ஜி முக்கிய பங்கு வகிப்பார் என்று நம்புகிறோம். பிஹாரில் காங்கிரஸ்- ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணியை ஆதரிப்போம்.

நான் ஒரு வாக்காளர். எனது கருத்தை வெளிப்படையாக தெரிவிக்க எனக்கு உரிமை உள்ளது. எந்தச் சட்டமும் எனது உரிமைக்கு தடை விதிக்கவில்லை. நான் இப்போது ஓர் அழைப்பை விடுத்துள்ளேன். அதை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் மக்களின் விருப்பம்.

கடந்த 65 ஆண்டுகளில் எந்தக் கட்சியும் முஸ்லிம்களின் நலனுக்காகப் பாடுபடவில்லை. அகாலி, யாதவர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கென தனிக் கட்சிகளைத் தொடங்கியுள்ளனர். ஆனால் முஸ்லிம்களுக்காக தனிக்கட்சி இல்லை. அதனால்தான் முஸ்லிம் கள் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர்நகர் கலவரத்துக்கு அந்த மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதி தான் பொறுப்பேற்க வேண்டும். அந்தக் கட்சி முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை. இதேபோல் பகுஜன் சமாஜும் சந்தர்ப்பவாத கட்சியாக உள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் நாங்கள் சமாஜ்வாதியையோ, பகுஜன் சமாஜ் கட்சியையோ ஆதரிக்கமாட்டோம். பிராந்திய கட்சிகளை ஆதரிப்பது வாக்கு களை வீணடிப்பதற்குச் சமம் என்று சயீது அகமது புகாரி தெரி வித்தார்.

காங்கிரஸுக்கு ஆதரவு புகாரி குடும்பத்தில் பிளவு

காங்கிரஸுக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் டெல்லியின் ஜும்மா மசூதி பேஷ் இமாமான சயீது அகமது புகாரி குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது.

இவரது இளைய சகோதரரும் ஜும்மா மசூதி ஒற்றுமை அமைப் பின் தலைவருமான யாஹியா புகாரி, காங்கிரஸ் கட்சி மதவாதக் கட்சி என்று குற்றம் சாட்டியுள்ளார். தம் மூத்த சகோதரரான அகமது புகாரியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்துப் பேசியதை யாஹியா விரும்பவில்லை. இதனை அவர் டெல்லியில் நிருபர்களிடம் வெளிப் படையாக நேற்று அறிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியை நேரிடை யாக குறிப்பிடாமல் பேசிய யாஹியா, இந்தமுறை ஒரு புதிய கட்சிக்கு முஸ்லிம்கள் ஆதர வளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x