Published : 14 Apr 2014 10:45 AM
Last Updated : 14 Apr 2014 10:45 AM

மோடி பிரதமரானால் சர்வாதிகார ஆட்சிதான்: மகாராஷ்டிர முதல்வர் அச்சம்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டில் சர்வாதிகார ஆட்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்று மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ் சவாண் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிருதிவிராஜ் சவாண் பேசியதாவது:

“நரேந்திர மோடி பயங்கரமான மனிதர். சர்வாதிகார ஆட்சியை கொண்டு வரும் நோக்கமுடையவர். அதனால்தான் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பாஜக கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் அவர் கொண்டு வந்த முறையையும், மூத்த தலைவர்களை ஓரங்கட்டிய முறையையும் பார்க்கும்போது தனியாளாக கட்சியை நடத்த அவர் முயற்சிப்பது தெரிகிறது. தனது நம்பிக்கைக்குரியவராக அமித் ஷா போன்றவர்களை வைத்துக்கொண்டிருக்கும் அவரின் நடவடிக்கை மிகவும் அச்சமூட்டுவதாக இருக்கிறது.

பாஜகவில் தனிநபர் ஆதிக்கத்தை கொண்டு வந்தவரை ஆட்சியில் அமர்த்தினால், அங்கும் சர்வாதிகார ஆட்சி முறையை கொண்டு வந்துவிடுவார். குஜராத் கலவரத்தின்போது அவர் நடந்து கொண்ட முறை, போலீஸ் அதிகாரிகளை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்திக் கொண்ட முறை ஆகியவற்றை எடுத்துக் கூறி நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை செய்து வருகிறோம்.

குஜராத்தை விட மகாராஷ் டிரத்தில் வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப் பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக மகாராஷ்டிரத்திற்கு வந்துள்ள அந்நிய நேரடி முதலீட்டின் அளவு, குஜராத்தை விட 11 மடங்கு அதிகமாகும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x