Published : 06 Apr 2014 05:37 PM
Last Updated : 06 Apr 2014 05:37 PM

இது எம் மேடை: வெள்ள உபரிநீர் கால்வாய்த் திட்டத்துக்கு நிதி தேவை

மகா. பால்துரை - ஒருங்கிணைப்பாளர், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு - எம்.எல். தேரி இணைப்புக் கால்வாய்ப் பகுதி விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளக் காலங்களில் சுமார் 13,758 மில்லியன் கனஅடி தண்ணீர் கடலில் கலக்கிறது. இந்த உபரிநீரைக் கன்னடியன் கால்வாயில் திருப்பி பச்சையாறு - நம்பியாறு - கருமேனியாறு ஆகியவற்றுடன் இணைக்கும் வெள்ள உபரிநீர்க் கால்வாய் அமைக்க 369 கோடி ரூபாயில் 2009-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன.

73 கி.மீ. நீளத்துக்கு வெட்டப்பட வேண்டிய இந்தக் கால்வாய் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 50 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 23 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுவதுடன் குடிநீர்ப் பிரச்சினையும் தீரும். திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்களும் பயன்பெறும். 252 குளங்கள் நீர் ஆதாரம் பெறும்.

கால்வாய் வெட்டும் பணியில் இரண்டு கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால், மூன்றாம் மற்றும் நான்காம் கட்டப் பணிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்காததால் கடந்த ஏழு மாதங்களாகப் பணிகள் முடங்கிக்கிடக்கின்றன. இன்னும் 37 கி.மீ-க்குக் கால்வாய் வெட்டவேண்டியிருக்கும் நிலையில், தற்போது இந்தத் திட்டத்தின் மதிப்பீடு 454 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது. மேலும், காலதாமதம் ஏற்பட்டால் 2016-ம் ஆண்டு இதன் மதிப்பீடு 600 கோடி ரூபாயை எட்டிவிடும். இதற்காக

ஏராளமான விவசாயிகளிடம் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. நாங்குநேரி, ராதாபுரம், சாத்தான்குளம் வட்டாரங்களில் விவசாயம் பாழ்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டன. இந்தப் பகுதிகளில் குடிநீருக்கே மக்கள் அல்லாடுகின்றனர். எனவே, போதிய நிதியை ஒதுக்கிப் பணிகளை முடிப்பது மிக அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x