Published : 23 Apr 2014 10:24 AM
Last Updated : 23 Apr 2014 10:24 AM

பிரதமர் பதவியை அடைய சிலர் எதையும் செய்ய தயாராகி விட்டனர்: மோடி மீது சோனியா மறைமுக குற்றச்சாட்டு

பிரதமர் பதவியை அடைவதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய சிலர் தயாராகி விட்டனர் என்று நரேந்திர மோடி மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினஜ்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியது: காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வீண் வதந்தியைப் பரப்புவதையே சிலர் தங்கள் முக்கிய வேலையாகக் கொண்டுள்ளனர். முக்கியமாக பாஜக தலைவர்கள் மக்களை தவறாக வழி நடத்துவதில் எல்லை மீறி செயல்பட்டு வருகின்றனர். பிரதமர் பதவியை அடைந்துவிட வேண்டும் என்பதற்காக ஒரு நபர் மக்களின் மதியை மயக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். பதவிக்காக எதையும் செய்ய தயாராகி விட்டார் என்று சோனியா பேசினார். எனினும் நரேந்திர மோடியின் பெயரை அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை.

மிகப் பெரும் பொய்களை மாயவலைபோல பரப்பி வரும் இதுபோன்ற நபர்களின் கைகளில் நாட்டின் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்காது.

கடந்த 10 ஆண்டுகளில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு மக்களுக்கு பல நன்மைகளைச் செய்துள்ளது. சர்வதேச அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோதிலும் இந்தியாவில் வளர்ச்சி விகிதம் நன்றாகவே இருந்தது. நாட்டு மக்கள் அனைவரது நலன்களையும் கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு கொள்கைகளை வகுக்கிறது, திட்டங்களைத் தீட்டுகிறது என்றார் சோனியா காந்தி.

மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசையும் அவர் குற்றம்சாட்டிப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x