Published : 27 Apr 2014 12:00 AM
Last Updated : 27 Apr 2014 12:00 AM

தனிநபர் துதி பாடுகிறது பாஜக: பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

தனிநபரை மையமாகக் கொண்டு பா.ஜ.க. துதிபாடி வருகிறது என பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டினார்.

ஆந்திர மாநிலம் தெலங்கானா பகுதியில் உள்ள நலகொண்டா மாவட்டம் புவனகிரியில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தெலங்கானா மக்களுக்கு கொடுத்த வாக்கை காங்கிரஸ் அரசு தக்க வைத்து கொண்டுள்ளது. பல்வேறு தடைகளுக்கு இடையே தெலங்கானா மாநிலம் உருவெடுத்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் விடாமுயற்சியே காரணம்.

தெலங்கானா மாநிலத்தில் ஏற்படும் முதல் அரசு வலிமையாக இருத்தல் அவசியம். பிரிக்கப்பட்ட இரு மாநிலங்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் முழு பொறுப்பேற்கும். மத தத்துவ கட்சியான பா.ஜ.க. வை இந்தத் தேர்தலில் தோற்கடியுங்கள். தனிப்பட்ட ஒருவரை துதிபாடும் கட்சியாக பா.ஜ.க. விளங்குகிறது. காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2004-11 வரை நாட்டில் ஏழ்மை 3 சதவீதம் குறைந்துள்ளது.

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழைகளுக்கு பல்வேறு நல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இலவசமாக தொடக்கக் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 11 கோடி மாணவ, மாணவியருக்கு நாடு முழுவதும் மதிய உணவுத் திட்டம் அமலில் உள்ளது. கல்வி, ஆரோக்கியம் போன்றவையே காங்கிரஸ் அரசின் முக்கிய குறிக்கோளாகும். காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் 2 லட்சம் கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆந்திரத்தில் மேதக் பகுதியில் ஐ.ஐ.டி ., ஹைதராபாதில் சர்வதேச விமான நிலையம், மெட்ரோ ரயில் மார்க்கம் போன்றவைகளை அமைத்தது காங்கிரஸ் அரசுதான். மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டம் மூலம் நாட்டில் 57 லட்சம் குடும்பத்தினர் பயன் அடைந்து உள்ளனர். அதனால் நாட்டில் நிலையான ஆட்சி அமைய காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x