

விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கிய சர்வதேச அறிவுசார் தொழில்நுட்ப திருவிழாவான 'கிராவிடாஸ் 2026’ தொடக்க விழாவில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்:வி.எம்.மணிநாதன்
வேலூர்: வளரும் நாடுகள் அண்டை நாடுகளுடன் நல்லுறவை கடை பிடித்து ஆயுதங்களுக்காக செலவிடப்படும் தொகையை கல்வி, மருத்துவம், சுகாதாரம் மற்றும் அடித்தட்டு, நடுத்தர மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் சர்வதேச அறிவு சார்தொழில் நுட்ப திருவிழாவான கிராவிடாஸ் - 2026 நேற்று தொடங்கியது. ஹெச்.சி.எல் டெக் நிறுவன டிஜிட்டல் வணிக சேவை பிரிவின் உலகளாவிய தலைவர்பவன் வடபள்ளி, திறமையாளர் தேர்வு பிரிவின் நிர்வாக துணைத் தலைவர் பிரின்ஸ் ஜெயக்குமார், வங்கதேச துணைத் தூதர் முகமது அலி முசமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.
வேலூர் விஐடியில் 3 நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவில், 31 நிகழ்ச்சிகள், 62 பயிலரங்குகள், 57 தொழில்நுட்ப போட்டிகள், 10 தொழில் முனைவோர் நிகழ்வுகள் உள்பட மொத்தம் 227 நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) கீழ் இயங்கும் போர் வாகனங்கள் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (சிவிஆர்டிஇ) சார்பில் இந்திய ராணுவ நவீன போர் வாகன தொழில்நுட்ப கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது: ட்ரோன் தொழில்நுட்பம் போர்க்களங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவதை காண்கிறோம். அதே ட்ரோன்களை உற்பத்திதிறனை அதிகரிக்கவும் ஆக்க பணிகளுக்கும் பயன்படுத்த முடியும். இதில், இளைஞர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
உலகில் சில நாடுகள் ஆயுத உற்பத்தியையே தொழிலாக கொண்டுள்ளன. போர் மூண்டால்தான் தங்களது ஆயுதங்களை விற்க முடியும் என்ற நோக்கில்செயல்படுகின்றன. உலகளவில் அதிகமாக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. வளரும் நாடுகள் தங்களது அண்டை நாடுகளுடன் நல்லுறவை கடைபிடித்தால் ஆயுதங்களுக்கான தொகையை மிச்சப்படுத்தி கல்வி, மருத்துவம், சுகாதாரம், அடித்தட்டு, நடுத்தர மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்த முடியும்.
தற்போது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் தங்களுக்குள் ஆரோக்கியமாக போட்டியிட்டு வருகின்றன. அதன்படி, வளரும் நாடுகள் தங்களுக்குள் ஒத்துழைப்பையும் ஆரோக்கியமான போட்டியையும் வளர்த்துக்கொண்டு பொருளாதாரரீதியாக முன்னேற வேண்டும். இவ்வாறு கூறினார்.
விழாவில், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி, உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன், ரமணி பாலசுந்தரம் பங்கேற்றனர்.