

சென்னை: ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மெயின் தேர்வெழுத 13,343 பேர் தேர்வாகி உள்ளனர்.
ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்பட 24 விதமான உயர் பணிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் இத்தேர்வு, முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, ஆளுமைத் தேர்வு என 3 நிலைகளை உள்ளடக்கியது.
இந்நிலையில், இந்த ஆண்டு மேற்குறிப்பிட்ட பதவிகளில் 1,016 காலியிடங்களை நிரப்புவதற்காக, முதல்நிலைத் தேர்வு மே 24-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை இந்தியா முழுவதும் 5.49 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழகத்தில் ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் தேர்வில் கலந்துக் கொண்டனர். இந்நிலையில், முதல்நிலைத் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி இணையதளத்தில் https://upsc.gov.in ) நேற்று வெளியிட்டது.
அதன்படி அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வெழுத 13,343 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 656 பேர் தமிழக மாணவர்கள். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வுக்கு ஜூன் 19 முதல் 28-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.