

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய டிஇஓ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. பிரதான தேர்வு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டக் கல்வி அதிகாரி (டிஇஓ) பதவி அடங்கிய குரூப்-1சி பிரிவில் முதல்கட்டமான முதல்நிலைத் தேர்வு கடந்த 2024 ஜூலை 12-ம் தேதி நடைபெற்றது.
இத்தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த கட்ட தேர்வான பிரதான (மெயின்) தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல் (பொதுப் பிரிவு மற்றும் பணியில் உள்ள ஆசிரியர் பிரிவு) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
பிரதான தேர்வு 2026 மார்ச் 12 முதல் 15-ம் தேதி வரை சென்னையில் மட்டும் நடைபெறும். அந்த தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள தேர்வர்கள், தேர்வுக் கட்டணம் ரூ.200-ஐ டிசம்பர் 15 முதல் 19-ம் தேதி வரை ஆன்லைனில் செலுத்தலாம்.
முதல்நிலைத் தேர்வு தேர்ச்சி குறித்து தேர்வர்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி வாயிலாக மட்டுமே தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.