

சென்னை: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகளுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்) தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் காலிப் பணியிடங்களும் 508 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்) அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த மே மாதம் 20-ம் தேதி அன்று வெளியிட்டது. அதில் உதவி பொறியாளர், வேளாண் விரிவாக்க அலுவலர், தோட்டக்கலை அலுவலர், உதவி இயக்குநர் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்), தொல்லியல் அலுவலர், இளநிலை அறிவியல் அலுவலர், பால்வள துணை மேலாளர், வட்டார சுகாதார புள்ளியியலாளர், ஜூனியர் ஃபோட்டோகிராபர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) உள்பட பல்வேறு விதமான பதவிகளில் மொத்தம் 401 காலிப்பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் மே 27 முதல் ஜூன் 25 வரை பெறப்பட்டன. தேர்வு நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பதவிகளில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிரித்ததாலும், புதிய பதவிகள் சேர்க்கப்பட்டதாலும் கூடுதலாக 15 காலியிடங்கள் சேர்த்து மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 461-லிருந்து 478 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகளுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் ஆகஸ்ட் 16 முதல் 20-ம் தேதி வரையும், தொடர்ந்து செப்டம்பர் 7 முதல் 19-ம் தேதி வரையும் இடைவெளி விட்டு நடத்தப்பட உள்ளன. அனைத்து பதவிகளுக்கும் பொதுத் தேர்வான கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வு மற்றும் பொது அறிவு தாள் தேர்வு செப்டம்பர் 19-ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது.
மேலும், இளநிலை அறிவியல் அலுவலர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2), உதவி புள்ளியியல் ஆய்வாளர், ஜூனியர் ஆர்க்கிடெக்ட் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஆகிய பதவிகளில் காலிப் பணியிடங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 476-லிருந்து 508 ஆக அதிகரித்துள்ளது.