

மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் திட்டம் குறித்து பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையை எட்டும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்காக பல செயல் திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.
தகவல் தொழில்நுட்பம், ஏவிஜிசி எனப்படும் வரைகலை, ஒளிக் காட்சிகள், விளையாட்டு சித்திரக்கலைத் துறைகள், விருந்தோம்பல், போன்ற துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தனித்துவமான பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களது கண்ணியமான வாழ்வாதார வாய்ப்புகள் உறுதி செய்யப்படும்.
மாற்றுத் திறனாளிகள் நலன் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உயர்தர உதவி சாதனங்கள் சரியான நேரத்தில் கிடைக்க இந்த பட்ஜெட்டில் பின்வரும் அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:
>>உதவி சாதனங்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், ஆராய்ச்சியில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளவும், இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகத்திற்கு ஆதரவு அளிக்கப்படும்.
>>பிரதமரின் மாற்றுத் திறனாளிகளுக்கான மையங்களை வலுப்படுத்தி அவற்றில், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கான உதவி உபகரணங்கள் அடங்கிய நவீன சில்லறை விற்பனை மையங்களை அமைக்க ஆதரவளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.