

சென்னை: ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையர் த.ஆனந்த், மாவட்ட அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளி, சமூக நீதி விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், காப்பாளர்கள் 2 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும்.
5 ஆண்டுக்குள் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், பதவி உயர்வு பெறுவதற்கு அனைவரும் கட்டாயம் டெட் தேர்ச்சி பெற வேண்டும். எனவே, தங்களது மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளி, சமூக நீதி விடுதிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், காப்பாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களில் டெட் தேர்ச்சி பெறாதவர்களைக் கணக்கெடுக்க வேண்டும். ஜூலையில் நடைபெற உள்ள டெட் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெறுமாறு அவர்களை மாவட்ட அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.