

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் 4-வது செமஸ்டரில் ‘நான் முதல்வன்’ திட்ட தொழில்நுட்ப படிப்புகள் சேர்க்கப்பட உள்ளன. இதற்காக ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் 6 நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நேற்று தொடங்கியது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2025-26) பாலிடெக்னிக் கல்லூரிகளில் 4-வது செமஸ்டரில் நான் முதல்வன் திட்ட தொழில்நுட்ப படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இதைத்தொடர்ந்து, அத்தொழில் நுட்ப பாடங்களை நடத்த இருக்கும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முடிவுசெய்தது.
இதற்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை டிசம்பர் 15 முதல் 20 வரை பயிற்சிக்கு அனுப்பி வைக்குமாறு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான 6 நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது.
மொத்தம் 10 மண்டலங்களாகப் பிரித்து சென்னை, திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, நாகப்பட்டினம், நாமக்கல், கோவை, சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், வலங்கைமான் ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இப்பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியை வெற்றிரமாக முடிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சான்றிதழ் வழங்கப்படும்.