

சென்னை: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை இரண்டாம் சுற்று கலந்தாய்வில் தங்களுக்கு கிடைத்துள்ள இடத்தை ஏற்றுக்கொண்ட 40,299 மாணவர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டாணைகளும், தங்களுக்கு கிடைத்துள்ள இடத்தை ஏற்றுக்கொண்டு மேல்நோக்கிய நகர்வுக்கு உறுதி செய்த 10,648 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டாணைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை-2026 கால அட்டவணையில் கொடுக்கப்பட்டிருந்த படி, இரண்டாம் சுற்றின் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்தல் நேற்றுடன் முடிவுற்ற நிலையில், தங்களுக்கு கிடைத்துள்ள இடத்தை ஏற்றுக்கொண்ட 40,299 மாணாக்கர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டாணைகளும், தங்களுக்கு கிடைத்துள்ள இடத்தை ஏற்றுக்கொண்டு மேல்நோக்கிய நகர்வுக்கு உறுதி செய்த 10,648 மாணாக்கர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டாணைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசு பள்ளியில் பயின்ற 6,914 மாணாக்கர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டாணைகளும், 2,647 மாணாக்கர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டாணைகளையும் சேர்த்து மொத்தமாக 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டுள்ளது.
மாணாக்கர்களுக்கு ஒதுக்கீட்டாணை வெளியிடுவதற்கு முன்பாக 06.08.2026 அன்று ஒதுக்கீட்டாணைகளை 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் இருந்து 33 பேராசிரியர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு தரவரிசை மற்றும் விருப்ப பட்டியலின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதா என்று நேரடி சரிபார்ப்பு செய்யப்பட்டது.
தற்காலிக (Tentative) ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள், தங்கள் விருப்பத் தேர்வில் குறிப்பிட்டுள்ள TFC (Tamil Nadu Facilitation Centre) மையத்திற்கும், இறுதி (Provisional) ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணாக்கர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரியிலும் நேரடியாகச் சென்று 09.08.2026 முதல் 13.08.2026 வரை அசல் சான்றிதழ்கள் மற்றும் கல்விக் கட்டணத்தை செலுத்தி சேர்க்கை பெறவேண்டும்.
13-08-2026 அன்றுக்குள், TFC மையத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்காத மாணாக்கர்கள் மற்றும் கல்லூரியில் சேராத மாணாக்கர்களுக்கான ஒதுக்கப்பட்ட இடங்கள் தானாகவே (Default) ரத்து செய்யப்படும். அவ்விடங்கள் அதே சுற்றில் (Round-2) மேல்நோக்கிய நகர்வுக்காக (Upward Movement) காத்திருக்கும் மாணாக்கர்களுக்கு ஒதுக்கப்படும்.
இதுவரை நடைபெற்ற சிறப்பு கலந்தாய்வு மற்றும் முதல் சுற்று கலந்தாய்வில், 28,979 மாணாக்கர்களுக்கு ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டு சேர்க்கை பெற்று வருகின்றது. பி.ஆர்க் கலந்தாய்வில் பொது பிரிவில் 622 மாணாக்கர்களுக்கும் மற்றும் அரசு பள்ளியில் பயின்ற 7.5 சதவித ஒதுக்கீட்டில் 40 மாணாக்கர்களுக்கும் ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டு சேர்க்கை பெற்று வருகின்றது.
மாணாக்கர்களுக்கு இறுதியாக ஒதுக்கப்பட்ட இடங்கள் www.tneaonline.org இணையதளத்தில் வெளிப்படைத்தன்மையுடன் கொடுக்கப்பட்டுள்ளது. பி.இ/பி.டெக்/பி.ஆர்க்-துணைக்கலந்தாய்வானது, +2 துணைத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணாக்கர்கள் மற்றும் பொதுக்கலந்தாய்வில் விண்ணப்பிக்காத மாணாக்கர்களுக்குக்காண விண்ணப்பங்கள் 17.08.2026 முதல் 31.08.2026 வரை பெறப்பட்டு, துணைக்கலந்தாய்வு 03.09.2026 முதல் 07.09.2026 வரை நடைபெறும்.
மாணாக்கர்கள் தங்களது விருப்ப பட்டியலில் எத்தனை கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவு விருப்பங்கள் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். அதனை கையாளும் வகையில் திறன்மிகுந்த மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு கொண்ட மென்பொருள் வடிவமைத்து செயலாக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடு தொடர்பான ஏதேனும் புகார்கள் இருப்பின் tndote@tndote.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம்.
கலந்தாய்வு மற்றும் ஒதுக்கீடு பற்றிய விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் உள்ள 110 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்களை தொடர்பு கொண்டோ அல்லது நேரில் சென்றோ தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதன் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
மாணாக்கர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தங்கள் கலந்தாய்வு தொடர்பான சந்தேகங்களையும் மற்றும் ஒதுக்கீட்டாணை பற்றிய விளக்கங்கள் பெற வேண்டி பத்து இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அழைப்பு எண்: 1800-425-0110.
இது தொடர்பாக, மாணாக்கர்கள் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.