

சென்னை: நடப்பு கல்வி ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வைத் தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 20-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடிவடைந்தது. இதன்மூலம் 28,550 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2-வது சுற்று கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இக்கலந்தாய்வுக்கு கட் ஆப் மதிப்பெண் 171 முதல் 135.75 வரை பெற்றுள்ள 93,117 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்துகொள்ள 5-ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்படும். அதன்பிறகு 7-ம் தேதி காலை 10 மணிக்கு அவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும். அதை அவர்கள் 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதிப்படுத்த வேண்டும்.
உறுதி செய்த மாணவர் களுக்கு 9-ம் தேதி காலை 10 மணிக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைனில் வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் டி.புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.