தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை செப்.7 வரை நீட்டிப்பு

ஐடிஐ மாணவர்கள் | கோப்புப் படம்
ஐடிஐ மாணவர்கள் | கோப்புப் படம்
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் செப்டம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் 278 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன.

இந்தத் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-2027-ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை கால அவகாசம் 31.08.2026 உடன் நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 07.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 95% பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். தொழிற்சாலைகளில் திறன் பெற்ற தொழிலாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளதாலும், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுவதாலும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது. குறைந்தபட்சம் ரூ.20,000 முதல் மாணவர்களின் திறனுக்கேற்றவாறு ரூ.30,000 வரை மாதச் சம்பளம் கிடைக்கிறது.

எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு முடித்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும்போதே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித் தேர்வராக தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு / பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழையும் பெறலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக்குகளில் நேரடியாக இரண்டாமாண்டு டிப்ளமோ படிப்பிலும் சேரலாம்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான அனைத்து தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படுவதோடு தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளிலும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் ரூ. 1000/- கூடுதலாக வழங்கப்படும்.

தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடு காலணிகள் (Shoes), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி ஆகிய அனைத்தும் வழங்கப்படும். குறிப்பிட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் விடுதி வசதியும் உள்ளது.

இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம். இது தொடர்பாக ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில், அலைபேசி எண் - 9499055642 வாட்ஸ்அப் எண் - 9499055612 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடிஐ மாணவர்கள் | கோப்புப் படம்
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ரூ.35-க்கு வெங்காய விற்பனை தொடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in