

சென்னை: பிஎட் முடித்தோருக்கான பட்டச்சான்றிதழ் ஏப்ரல் 1 மற்றும் 2-ம் தேதி விநியோகிக்கப்படும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கல்வியியல் கல்லூரிகளில் கடந்த 2022-2024-ம் ஆண்டு பிஎட் படித்து முடித்த மாணவர்களுக்கான பட்டச்சான்றிதழ் மார்ச் 26 மற்றும் 27-ம் தேதி மாவட்ட வாரியாக கல்வியியல் கல்லூரிகளுக்கு விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. பின்னர் நிர்வாக காரணங்களால் சான்றிதழ் விநியோகம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், பிஎட் பட்டச்சான்றிதழ்கள் ஏப்ரல் 1 மற்றும் 2-ம் தேதி கல்வியியல் கல்லூரிகளிடம் வழங்கப்படும். கல்வியியல் கல்லூரி நிர்வாகத்தினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் தகுதியான பிரதிநிதியை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒருவேளை குறிப்பிட்ட நாளில் வர இயலாவிட்டால் அடுத்த வேலை நாள் அன்று வந்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) பி.கணேசன் அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் (தன்னாட்சி கல்லூரிகள் தவிர) தகவல் அனுப்பியுள்ளார்.