இளம் சாதனையாளர் கல்வி உதவித் தொகை - குமுதா பள்ளி மாணவர்கள் சாதனை

இளம் சாதனையாளர் கல்வி உதவித் தொகை - குமுதா பள்ளி மாணவர்கள் சாதனை
Updated on
1 min read

ஈரோடு: 9 மற்றும் 11-ம் வகுப்பு பயிலும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பங்கேற்கும், பாரதப் பிரதமரின் இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத் தேர்வு மத்திய அரசால் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.

சமீபத்தில் நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 15 ஆயிரம் பேர் எழுதினர். இதில் 400-க்கு 140 மதிப்பெண் பெற்றவர் தேர்ச்சி பெற்றவர்களாவர். தமிழ்நாட்டில் இத்தேர்வை எழுதிய மாணவர்களில் 232 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களில் குமுதா பள்ளியின் ஆர்.ஜி.நவீன் என்ற 11-ம் வகுப்பு மாணவர் 276 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் இப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்கள் 11 பேர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 13 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 12 பேர் குமுதா பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை 11 மற்றும் 12-ம் வகுப்பு ஆகிய 2 ஆண்டுகளுக்கு ரூ.2.5 லட்சம் பெறுவர்.

இளம் சாதனையாளர்கள் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவ, மாணவிகளை ஈரோடு ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி, உதவி ஆட்சியர் (பயிற்சி) பொன்மணி, வருவாய் கோட்டாட்சியர் திவ்யபிரியதர்சினி ஆகியோர் வாழ்த்தினர். பள்ளி தாளாளர் கே.ஏ.ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலாளர் ஜே.அரவிந்தன், துணைச் செயலாளர் ஏ.சி.மாலினி அரவிந்தன், முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in