

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 86.86 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புலியூர் மேல்நிலைப் பள்ளியில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 2022-23 கல்வியாண்டில் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் 2 ஆயிரத்து 626 மாணவர்கள், 3ஆயிரத்து 273 மாணவிகள் எனமொத்தம் 5 ஆயிரத்து 899 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதில் 2 ஆயிரத்து 129 மாணவர்கள் (81.07%), 2 ஆயிரத்து 995 மாணவிகள் (91.50%) என மொத்தம்5 ஆயிரத்து 124 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 86.86 ஆகும். கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 86.47 சதவீதமாக இருந்தது. இந்தஆண்டு 0.39 சதவீதம் அதிகமாகும்.
பாடவாரி தேர்ச்சி விகிதம்: பாட வாரியான தேர்ச்சி சதவீதத்தில் வேதியியல், தாவரவியல், வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளில்தலா ஒரு மாணவரும், வணிகக்கணிதம், புள்ளியியல், புவியியல்ஆகிய பாடப் பிரிவுகளில் தலா 2 பேரும், கணினி அறிவியல் பாடப் பிரிவில் 3, பொருளியல் பாடப்பிரிவில் 7, வணிகவியல் பாடப் பிரிவில் 20, கணக்கு பதிவியல் பாடப் பிரிவில் 25, கணினி பயன்பாடுகள் பாடப் பிரிவில் 9 என மொத்தம் 71 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மதிப்பெண்கள் அடிப்படையில் 52 மாணவர்கள் 551-க்கு மேல் 600 வரையும், 254 பேர் 501-லிருந்து 550 வரையும், 456 மாணவர்கள் 451-லிருந்து 500 வரையும் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
பெரம்பூர் பள்ளி முதலிடம்: மதிப்பெண்கள் அடிப்படையில் பெரம்பூரில், எம்.எச். சாலையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 600-க்கு 592 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மார்க்கெட் தெருமாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி 60-க்கு 589 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 600-க்கு 587 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.
தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், புலியூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் பெற்று முதலிடத்தையும், சுப்பராயன் சென்னை மேல்நிலைப் பள்ளி 98.29சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், நெசப்பாக்கம் மேல்நிலைப் பள்ளி 97.89 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.