தமிழக அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் கணக்கெடுப்பு பணியை விரைந்து முடிக்க உத்தரவு

தமிழக அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் கணக்கெடுப்பு பணியை விரைந்து முடிக்க உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு விவரங்கள் கணக்கெடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் அனைத்து அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (எஸ்ஐடிஎஸ்) தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.

பொறியாளர்கள் நேரில் ஆய்வு: இந்த திட்டத்தின் கீழ் அனைத்து அரசுப் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு விவரங்களை துறைசார்ந்த பொறியாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அதன் விவரங்களையும் எஸ்ஐடிஎஸ் செயலி வழியாக பதிவேற்றம் செய்து பள்ளியின் கட்டமைப்பு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

அந்தவகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் கட்டமைப்பு விவரங்கள் அனைத்தும் பொறியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மே இறுதிக்குள் முடிக்க திட்டம்: அதேபோல், தொடக்க, நடு நிலைப் பள்ளிகளில் 50 சதவீத உள்கட்டமைப்பு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 50 சதவீத பள்ளிகளிலும் பணிகளை மே மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, கோடை விடுமுறை காலத்தில் மீதமுள்ள பள்ளிகளை பார்வையிட பொறியாளர்கள் வரும்போது அதன் தலைமையாசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இந்த பணிகளில் சுணக்கம் ஏற்படாதவாறு செயல்பட அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in