

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு, பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது.
அதனடிப்படையில், இந்திய மேலாண்மைக் கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் முதுகலை வணிக மேலாண்மை (எம்பிஏ) மேற்படிப்பு படிக்க நடப்பாண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ள பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியினை பெற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைமுறை அனைத்தும் இணையதளம் வழியாகவே நடைபெறும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தேசிய அளவிலான பொதுநுழைவுத் தேர்வு பயிற்சிகள் வழங்கப்படும். இதை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அடுத்தகட்ட தேர்வுகளான நேர்காணல், குழு கலந்தாய்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
சேர்க்கை கிடைத்தவுடன் எம்பிஏ படிக்க ஆகும் செலவினை தாட்கோ அல்லது வங்கிகள் மூலமாக கல்விக்கடனாக பெற்றுத் தரப்படும். இப்பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு தேவையான மடிக்கணினி வசதிகள் தாட்கோ மூலமாக ஏற்பாடு செய்து தரப்படும். தேர்வுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும்.