அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்: தன்னார்வலர்களை பயன்படுத்த உத்தரவு

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்: தன்னார்வலர்களை பயன்படுத்த உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களை பயன்படுத்திக் கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த ஏப்.17-ம்தேதி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து சேர்க்கைப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முன்பதிவு செய்து வருகின்றனர்.

இதுதவிர, கிராமப்புறங்களில் அரசுப் பள்ளியில் சேருவதில் உள்ள பயன்கள், அரசின் நலத்திட்டங்களை முன்வைத்து ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாணவர் சேர்க்கைப் பணிகளில் இல்லம்தேடிக் கல்வி தன்னார்வலர்களையும் பயன்படுத்திக் கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களில், ‘இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் ஆர்வத்துடன் பங்களிப்பாற்ற வேண்டும். தாங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் மழலையர் அல்லது ஒன்றாம் வகுப்பில் சேர்க்க தகுதியுள்ள மாணவர்களின் பெற்றோர்களை அணுகி, அவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

சேர்க்கைக்கு விருப்பம் தெரிவிக்கும் குழந்தைகளின் விவரங்களை சேகரித்து, பள்ளிக்கல்வி தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், அந்த தகவலை சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in