

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் ‘போஸ்ட் மெட்ரிக்’ கல்வி உதவித்தொகையை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் கடந்த ஜன.30-ம் தேதி திறக்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெறத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இன கல்லூரி மாணவர்களிடம் இருந்து புதிய மற்றும் புதுப்பித்தலுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த 2022-23-ம் கல்வியாண்டு முதல் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்களே இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். எனவே, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், இணையவழியில் பெறப்பட்ட வருமான சான்று மற்றும் சாதி சான்று உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் https://tnadtwscholarship.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், மாணவர்கள் சிரமமின்றி இணையதளத்தில் விண்ணப்பிக்க ஏதுவாக அவர்கள் கல்வி பயிலும் கல்லூரிகள் மூலம் அக்கல்லூரியின் பொறுப்பு அலுவலர் முன்னிலையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.