அரசுப் பள்ளிகளில் இன்று எஸ்எம்சி குழு கூட்டம் - பொது தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

அரசுப் பள்ளிகளில் இன்று எஸ்எம்சி குழு கூட்டம் - பொது தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு
Updated on
1 min read

சென்னை: அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் இன்று (பிப்.3 ) நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி), மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி, பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சிப் பிரதிநிதி மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டது.

அத்துடன், பள்ளிகளில் எஸ்எம்சி கூட்டம் மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு பள்ளி வளர்ச்சிக்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் எஸ்எம்சி குழு கூட்டம், இனி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி ஆணையரகம் அறிவித்தது. அதன்படி, நடப்பு மாதத்துக்கான கூட்டம், இன்று (பிப்.3) மாலை 3 முதல் 4.30 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் பள்ளி வளர்ச்சி, இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு, இல்லம் தேடி கல்வி, 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள், பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்வி ஆலோசனை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தல்: இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தீர்மானங்களாக நிறைவேற்றி தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கூட்டத்தில் எஸ்எம்சி குழுவில் உள்ள ஆசிரியர், சமூக ஆர்வலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் அவசியம் பங்கேற்க வேண்டும்.

அரசின் வழிகாட்டுதல்களின்படி எஸ்எம்சி கூட்டம் சிறந்த முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்து, அதன் விவரங்களை தொகுத்து இயக்குநரகத்துக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in