Last Updated : 30 Jan, 2023 06:16 PM

 

Published : 30 Jan 2023 06:16 PM
Last Updated : 30 Jan 2023 06:16 PM

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் 1,989 இடங்களை நிரப்ப பிப்.2, 3-ல் உடனடி மாணவர் சேர்க்கை

கோப்புப் படம்

கோவை: இணைப்புக் கல்லூரிகளில் காலியாக 1,989 இடங்களை நிரப்ப பிப்.2 மற்றும் 3-ம் தேதிகளில் உடனடி மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், இணைப்புக் கல்லூரிகளில் இளநிலை பிரிவில் காலியாக உள்ள 1,989 மாணவர் சேர்க்கைக்கான இடங்களை நிரப்புவதற்கான உடனடி மாணவர் சேர்க்கை வரும் 2-ம் தேதி மற்றும் 3-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடக்கவுள்ளன. உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் கலந்தாய்வுக்குரிய குறிப்பிட்ட தேதியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு வந்து கலந்து கொள்ள வேண்டும். உடனடி மாணவர் சேர்க்கை இப்பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும். உறுப்புக் கல்லூரிகளுக்கு பொருந்தாது.

உடனடி மாணவர் சேர்க்கையில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்களிடமிருந்து மட்டுமே கலந்தாய்வு கட்டணம் பெறப்படும். இதில் மாணவர் சேர்க்கைக்கு நகர்வு முறை கிடையாது. பொது கலந்தாய்வில் இடம் கிடைத்து, கலந்தாய்வினை தவறவிட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள், புதிதாக கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம்.

பொது கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள், சேர்க்கை பெற்றவர்கள் அல்லது இடைநிறுத்தம் செய்து கொண்டவர்கள் பங்கேற்க அனுமதியில்லை. உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளும் மாணவர்கள், கல்லூரியை தேர்வு செய்யும் முன் கலந்தாய்வு கட்டணம் செலுத்த தேவையில்லை. கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவு ரூ. 1500- மற்றும் இதர பிரிவினர் ரூபாய் 3 ஆயிரம் செலுத்த வேண்டும்.

இணைப்புக் கல்லூரிகளுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ. 40 ஆயிரம் முதல் ரூபாய் 50 ஆயிரம் வரை இருக்கும். உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொண்ட மாணவர்களின் வருகைப்பதிவேடு குறிக்கப்பட்டு, தரவரிசை நிர்ணயிக்கப்படும். மாணவர்களுக்கு கல்லூரி காலியிடம் திரையில் தெரிவிக்கப்படும்.

தர வரிசையின் அடிப்படையில், மாணவர்கள் கல்லூரி மற்றும் பட்டப்படிப்பினை தேர்வு செய்ய அழைக்கப்படுவார்கள். உடனடி மாணவர் சேர்க்கையின் போது இடம் கிடைக்கப் பெற்ற மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு கட்டணத்தை செலுத்தி உடனடியாக கல்லூரியில் சேரலாம். பணம் கட்டுவதற்கான வசதி பல்கலைக்கழக வளாகத்திலேயே செய்யப்பட்டு இருக்கும்.

உடனடி மாணவர் சேர்க்கையின் போது அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டவுடன், காத்திருப்பு பட்டியல் உருவாக்கப்படும். உடனடி மாணவர் சேர்க்கைக்கான வகுப்புவாரியான இட ஒதுக்கீடு, கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் மற்றும் காலியிடங்களுக்கான அட்டவணை இன்று www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். உடனடி மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களுக்கு 0422-6611345 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x