தலைவாசல் அருகே 2 ஆண்டாக கணித ஆசிரியர் இல்லாததால் அரசுப் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சேலம்: தலைவாசல் அருகே அரசுப் பள்ளியில் கடந்த 2 ஆண்டாக கணித ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே பட்டத்துறை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளியில் 135-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 2 ஆண்டாக கணித ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் கணிதப் பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம், கணித ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், நடவடிக்கை எடுக்கப் படவில்லை. இந்நிலையில் நேற்று, ஒன்று திரண்ட மாணவ, மாணவிகள் தலைவாசல் - சிறுவாச்சூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த வட்டார கல்வி அலுவலர் ஜெயந்தி, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

உடனடியாக கணித ஆசிரியர் பணியிடம் நிரப்ப தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு திரும்பினர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in