Published : 27 Nov 2022 04:20 AM
Last Updated : 27 Nov 2022 04:20 AM

அனைத்து மாவட்டங்களிலும் 2023-க்குள் சட்டக் கல்லூரி உருவாக்கப்படும்: அமைச்சர் உறுதி

நாமக்கல்லில் அரசு சட்டக் கல்லூரிக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அடிக்கல் நாட்டினார். உடன், சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், எம்பி கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் உள்ளிட்டோர்.

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் ரூ.92.31 கோடி மதிப்பில் அரசு சட்டக் கல்லூரி புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார்.

சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அடிக்கல் நாட்டி பேசியது: சட்ட தினம் கொண்டாடும் நாளில், நாமக்கல்லில் அரசு சட்டக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவது சிறப்பான ஒன்றாகும். அதிக நீதிமன்றங்கள் மட்டும் போதாது. அந்த நீதிமன்றங்களில் மக்களுக்காக வழக்காடும் வழக்கறிஞர்கள் எண்ணிக்கையும் அதிகமாக தேவை என்ற உணர்வோடு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் சட்டக் கல்லூரி உருவாகுவதற்காக அனுமதி அளிக்கப்பட்டது.

‘எந்த மாவட்டத்தில் அவசியமாக தேவையோ அங்கு சட்டக்கல்லூரிகளை உருவாக்க வேண்டும்’ என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து வரும்ஆண்டுக்குள் நிச்சயமாக அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சட்டக் கல்லூரி இருப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சிக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், எம்பி கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், எம்எல்ஏக்கள் பெ.ராமலிங்கம், கு.பொன்னுசாமி முன்னிலை வகித்தனர். சட்டக்கல்வி இயக்குநர் ஜெ.விஜயலட்சுமி, நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் தி.ரா.அருண் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x