Published : 10 Nov 2022 07:48 PM
Last Updated : 10 Nov 2022 07:48 PM

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 30% இடஒதுக்கீடு கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை 30 சதவீதமாக உயர்த்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அகில பாரதிய சத்திரிய மகாசபாவின் தேசிய துணை தலைவர் வெங்கடேசன் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு அமலுக்கு வரும் முன், 0.15 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது.

நடப்பு கல்வியாண்டில் 2,656 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதும், 500 மாணவர்கள் மட்டுமே 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பயனடைந்துள்ளனர். எஞ்சிய மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்க்கை பெற முடியாத நிலை உள்ளது. எனவே, நீட் தேர்வில் தகுதி பெற்ற 2,656 மாணவர்களும் சேர்க்கை பெறும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 இடஒதுக்கீட்டை 30 சதவீதமாக அதிகரிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x