Published : 14 Sep 2022 07:42 PM
Last Updated : 14 Sep 2022 07:42 PM

கல்விக் கட்டணத்தை அரசு கணக்கில் செலுத்தும் நடைமுறை: தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ‘செக்’

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்கள் தங்களது கல்விக் கட்டணத்தை தமிழக அரசின் வங்கிக் கணக்கில் செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் மருத்துவர்களுக்கான கலந்தாய்வு குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகயில், "36 மருத்துவமனைகளில் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 2008 மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் 100% வெளிப்படையாக இந்தக் கலந்தாய்வு நடைபெற்றதே இதன் சிறப்பு அம்சம்.

கிராமப்புறங்களில் இருக்கிற மருத்துவக் கல்லூரிகளில், அதாவது ஊட்டி, நாகப்பட்டினம், திருப்பூர் போன்ற வெளிப்பகுதிகளில் உள்ள இடங்களில் 100 சதவீதம் மருத்துவர்கள் பணியமர்த்த முடிந்தது. கரோனா அதிகமாக இருந்த காலக்கட்டத்தில், பாதிப்பு குறைவாக இருந்த இடங்களில் இருந்து மருத்துவர்கள் அதிகமுள்ள இடங்களுக்கு பணி அமர்த்தப்பட்டனர். தற்போது கரோனா தாக்கம் குறைந்து வருவதால் அவர்களின் விருப்பமான பணியிடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் பெற்றோர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க இந்த வருடம் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்கள் கல்லூரிக் கட்டணத்தை அரசின் கணக்கில் செலுத்தினால் போதும். அந்த செலுத்திய படிவத்தை எடுத்துக்கொண்டு கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம். இந்தப் புதிய திட்டம் இந்த ஆண்டு முதலே நடைமுறைக்கு வரும்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் நடந்தது. அதற்கான தேர்வு முடிவு கடந்த 7-ந் தேதி வெளியானது. நீட் தேர்வு எழுதியவர்களில், 56.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதி இருந்தனர். அதில், 67 ஆயிரத்து 787 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அந்தவகையில் தமிழகத்தின் நீட் தேர்ச்சி சதவீதம் 51.3 ஆகும். இது கடந்த ஆண்டுகளைவிட குறைவான தேர்ச்சி சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டது.

நீட் தேர்வுக்கு 17 ஆயிரத்து 972 அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்து இருந்ததாகவும், ஆனால் இவர்களில் 12 ஆயிரத்து 840 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். அந்தவகையில், தேர்வு எழுதியவர்களில் 4 ஆயிரத்து 447 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது 35 சதவீதம் தேர்ச்சி ஆகும். கடந்த சில ஆண்டுகளுடனான தேர்ச்சி சதவீதத்தை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் சற்று அதிகம். இந்த ஆண்டு தேர்ச்சியில், விழுப்புரம், விருதுநகர், சேலம், நீலகிரி, பெரம்பலூர், மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாவட்டங்களில் 100 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 172 பேர் எழுதியதில் 104 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். மற்ற பெரும்பாலான மாவட்டங்களில், 20 முதல் 25 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x