Published : 13 Sep 2022 05:47 AM
Last Updated : 13 Sep 2022 05:47 AM

ஜேஇஇ முதன்மை தேர்வில் உ.பி. மாணவர்கள் முதலிடம்

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இது ஜேஇஇ முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு என 2 கட்டமாக நடத்தப்படும்.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மை தேர்வு கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மும்பை ஐஐடி நடத்திய இந்த தேர்வை நாடு முழுவதும் 1.55 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவுகள் https://jeeadv.ac.in என்ற இணையதளத்தில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.

தேர்வு எழுதியதில் 6,516 மாணவிகள் உட்பட மொத்தம் 40,712 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மும்பை ஐஐடி மண்டலத்தைச் சேர்ந்த மாணவர் ஆர்.கே.சிஷிர் மொத்தம் உள்ள 360-க்கு 314 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். பெண்கள் பிரிவில் மாணவி தனிஷ்கா காப்ரா 277 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். ஜேஇஇ முதன்மைத் தேர்வில் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்றவர்களில் அதிகபட்சமாக உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த 3,864 மாணவ,மாணவிகள் அடங்குவர். அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானைச் சேர்ந்த 3,339 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த 3,036 பேர் தேர்ச்சி பெற்று 3-வது இடத்திலும், ஆந்திராவைச் சேர்ந்த 2,241 பேர் தேர்ச்சி பெற்று 4-வது இடத்திலும் உள்ளனர். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 2,152 பேர் தேர்ச்சி அடைந்து 5-வது இடத்தில் உள்ளனர்.

இதுகுறித்து ரூர்கி ஐஐடி முன்னாள் இயக்குநர் பிரதீப்டோ பானர்ஜி கூறும்போது, “கடந்த சில ஆண்டுகளாக ஊரகபகுதி மாணவ, மாணவிகளும் ஜேஇஇமுதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். குறிப்பாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மிகவும் ஏழ்மையான பின்னணி கொண்ட பெற்றோரும் தங்களது குழந்தைகளை நல்ல முறையில் தேர்ச்சி பெற வைத்து அவர்களது தொழில்நுட்பக் கல்விக்கு உறுதுணையாக இருக்கின்றனர். சிறு வயது முதலே தங்களது குழந்தைகளை ஜேஇஇ தேர்வுக்காக பயிற்சியில் சேர்த்து விடுகின்றனர்” என்றார்.

ஆந்திராவைச் சேர்ந்த ஐஐடி பேராசிரியர் ஒருவர் கூறும்போது, “ஜேஇஇ முதன்மைத் தேர்வில் ஏராளமான சிபிஎஸ்இ மாணவ, மாணவிகள் வெற்றி பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த ஆண்டில் உ.பி. மாநிலத்தைப் போல ஆந்திரா மாணவர்களும் நல்ல தேர்ச்சியைப் பெற்றுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக ஜேஇஇ தேர்வில் மகாராஷ்டிர மாநிலம் சிறப்பிடம் பெற்று வருகிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x