Published : 13 Sep 2022 04:19 AM
Last Updated : 13 Sep 2022 04:19 AM

6 மாவட்டங்களில் அனைவரும் பாஸ் - நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 35% பேர் தேர்ச்சி

சென்னை: நீட் தேர்வில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 35 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் நடந்தது. அதற்கான தேர்வு முடிவு கடந்த 7-ந் தேதி வெளியானது. நீட் தேர்வு எழுதியவர்களில், 56.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதி இருந்தனர்.

அதில், 67 ஆயிரத்து 787 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அந்தவகையில் தமிழகத்தின் நீட் தேர்ச்சி சதவீதம் 51.3 ஆகும். இது கடந்த ஆண்டுகளைவிட குறைவான தேர்ச்சி சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில், அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர்? அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர்? என்ற விவரங்கள் வெளியிடப்படாமல் இருந்தன.

இந்நிலையில், அதன் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டது. அதன்படி, நீட் தேர்வுக்கு 17 ஆயிரத்து 972 அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்து இருந்ததாகவும், ஆனால் இவர்களில் 12 ஆயிரத்து 840 பேர் மட்டுமே தேர்வு எழுதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தேர்வு எழுதியவர்களில் 4 ஆயிரத்து 447 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது 35 சதவீதம் தேர்ச்சி ஆகும். கடந்த சில ஆண்டுகளுடனான தேர்ச்சி சதவீதத்தை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் சற்று அதிகம்.

இந்த ஆண்டு தேர்ச்சியில், விழுப்புரம், விருதுநகர், சேலம், நீலகிரி, பெரம்பலூர், மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாவட்டங்களில் 100 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 172 பேர் எழுதியதில் 104 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். மற்ற பெரும்பாலான மாவட்டங்களில், 20 முதல் 25 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x