Published : 12 Sep 2022 06:32 AM
Last Updated : 12 Sep 2022 06:32 AM

ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு: நாடு முழுவதும் 40,712 பேர் தேர்ச்சி

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 6,516 மாணவிகள் உட்பட மொத்தம் 40,712 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இது ஜேஇஇ முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு என 2 கட்டமாக நடத்தப்படும்.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மை தேர்வு கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மும்பை ஐஐடி நடத்திய இந்த தேர்வை நாடுமுழுவதும் 1.55 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவுகள் https://jeeadv.ac.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன.

தேர்வு எழுதியதில் 6,516 மாணவிகள் உட்பட மொத்தம் 40,712 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மும்பை ஐஐடி மண்டலத்தை சேர்ந்த மாணவர் ஆர்.கே.சிஷிர் மொத்தம் உள்ள 360-க்கு 314 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

பெண்கள் பிரிவில் மாணவி தனிஷ்கா காப்ரா 277 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

அதன் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x