Published : 26 Aug 2022 04:46 AM
Last Updated : 26 Aug 2022 04:46 AM

‘வாழ்வை உயர்த்தும் உயர்கல்வி’ | படிப்பை போலவே கல்லூரியை தேர்வு செய்வதும் மிகவும் முக்கியம் - கல்வியாளர்கள் அறிவுரை

சென்னை: ‘‘எந்த படிப்பை படிப்பதென மாணவர்கள் யோசித்து தேர்வு செய்வதை போலவே, எந்த கல்லூரியில் படிப்பது என்பதைத் தேர்வு செய்வதும் மிகவும் முக்கியம்’’ என்று ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ், சேலம் சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி இணைந்து நடத்திய ‘வாழ்வை உயர்த்தும் உயர்கல்வி’ நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிளஸ் 2-வுக்குப் என்ன படிப்பது, எங்கு படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என்பது உள்ளிட்ட மாணவர்கள், பெற்றோர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு ஆலோசனைகள், வழிகாட்டுதலை வழங்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’, சேலம் சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி இணைந்து ‘வாழ்வை உயர்த்தும் உயர்கல்வி’ எனும் இணையவழி ஆலோசனை நிகழ்ச்சியை கடந்த புதனன்று நடத்தியது. இந்த நிகழ்வில் கல்வியாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றியதாவது:

சேலம் சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி முதல்வர் டாக்டர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார்: உயர் கல்வியை நாம் சிறப்பாக படித்தால் நிச்சயம் வாழ்வில் உயர முடியும். பள்ளிப் படிப்பை முடித்து, உயர் கல்விக்குச் செல்லும்போது நமது விருப்பமும் தேர்வும் உயர்ந்தவையாக இருக்க வேண்டும்.

இந்திய அளவில் 1.5 மில்லியன் பள்ளிகளும், 8.5 மில்லியன் ஆசிரியர்களும், 250 மில்லியன் மாணவர்களும் பள்ளிப் படிப்பை படித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாணவர்கள் பிளஸ் 2 முடித்துவிட்டு உயர்கல்விக்குச் செல்லும்போது இன்ஜினீயரிங், ஆர்ட் அண்ட் சயின்ஸ், சட்டம், மருத்துவம், விவசாயம், மியூசிக் என எண்ணற்ற படிப்புகள் உள்ளன. இவற்றில் எதைப் படிப்பது என்கிற தேர்வுதான் அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது.

எந்த துறை சார்ந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என்பதை அறிந்துகொண்டு, எந்தக் கல்லூரில் படித்தால் சிறப்பான கல்வியைப் பெறலாம் என்பதையும் தெரிந்து, அதில் சேர்ந்து படித்தால் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளலாம்.

வாரங்கல் என்ஐடி முன்னாள் மாணவரும், தொழில் வழிகாட்டி ஆலோசகருமான ஆர்.அஸ்வின்: இன்றைய மாணவர்கள் தங்கள் முன்னேயிருக்கும் வாய்ப்புகளை அறியாமல் இருக்கிறார்கள். மத்திய அரசு மற்றும் மத்திய அரசின் உதவிபெற்ற 150 கல்வி நிறுவனங்களில் மட்டுமே 72 வகையான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால் நம் மாணவர்களுக்குத் தெரிந்தவை நீட் மற்றும் ஜேஇஇ இரண்டு தேர்வுகள் மட்டுமே. 72 வகையான தேர்வுகள் என்றாலும் அதற்கு 4 வகைகளிலான தயாரிப்புகளே போதும். இந்த 4 வகை தயாரிப்புகளில் ஒரு வகை தயாரிப்பில் மிகுந்த தேர்ச்சியுடன் இருக்க வேண்டியது அவசியம்.

முதல் வழி - பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்தமெட்டிக்ஸ். இரண்டாவது வழி - பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜி. மூன்றாவது வழி - காமர்ஸ் குரூப் எடுத்துப் படித்த மாணவர்களுக்கான ஆபிடியூட், லாஜிக்கல் ரிசனிங், வெர்பல் எபிலிட்டி அண்ட் சென்ரல் நாலெட்ஜ். நான்காவது - மாணவர்களிடம் இருக்கும் இசைத்திறன், ஓவியம் வரையும் திறன் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு பிளஸ் 2-வில் 50 சதவீத மதிப்பெண் இருந்தால் சிறந்த கல்லூரிகளில் சேர்ந்து இதற்கான படிப்புகளை மாணவர்கள் படிக்கலாம்.

சோனா காலேஜ் ஆஃப்டெக்னாலஜி சிவில் துறைத் தலைவர் டாக்டர் ஆர்.மாலதி: மாணவர்கள் எதைத் தேர்வு செய்து படித்தாலும் அதை விரும்பித் தேர்வுசெய்து படிக்க வேண்டும். எவரொருவர் பத்தாயிரம் மணி நேரம் ஒரு விஷயத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்களோ அவர்களே அதில் சிறந்த ஆளுமையுடையவர்களாக மாறுகிறார்கள் என்று சொல்கிறார்கள். நம்மிடம் இருக்கும் ஏதோவொரு ஸ்கில் அல்லது நாலெட்ஜ் எதுவென கண்டறிந்து அதற்கேற்ற படிப்பில் சேர வேண்டும்.

இன்றைக்கு சிவில் இன்ஜினீயரிங் துறையில் எண்ணற்ற பிரிவுகளும் நல்ல வேலைவாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு தேசத்தின் வளர்ச்சியில் சிவில் இன்ஜினீயரிங் துறையின் பங்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. ரோடு, பாலம், டாம், பில்டிங்ஸ்என எல்லாமே நாளுக்கு நாள் அதிகரிக்கும்போது, சிவில் இன்ஜினீயரிங் துறையின் வேலைவாய்ப்புகளும் பெருகிக்கொண்டே தான் இருக்கின்றன.

சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி ஃபேஷன் டெக்னாலஜி துறைத் தலைவர் டாக்டர் டி.ராஜா: கம்ப்யூட்டர் தொடர்பான படிப்புகளைப் பற்றி தெரிந்துகொள்வதிலேயே மாணவர்கள் ஆர்வத்தோடு இருப்பதால் மற்ற முக்கியமான பல படிப்புகளைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். டெக்ஸ்டைல் துறைக்குள் இருக்கும் முக்கியமான பிரிவு ஃபேஷன் டெக்னாலஜி. இன்ஜினீயரிங் துறையில் ஏதேனும் ஒரு படிப்பை எடுத்துப் படித்த பிறகு, நமக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு காலமெல்லாம் கிடைக்குமா என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால், ஆடை வடிவமைப்பு எனும் இந்த ஃபேஷன் டெக்னாலஜி துறை எப்போதும் வேலைவாய்ப்புகளைக் கொண்டதாகவும், புதிய சிந்தனைக்கும், செயல்களுக்கும் வாய்ப்புகளை வழங்குவதாகவும் விளங்குகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதன்பின் மாணவர்கள், பெற்றோரின் சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள் விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் மு.முருகேசன் நெறிப்படுத்தினார். இந்த நிகழ்வில் பங்கேற்கதவறியோர் https://www.htamil.org/00949 -ல் முழு நிகழ்வையும் காணலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x