Last Updated : 23 Aug, 2022 09:33 PM

 

Published : 23 Aug 2022 09:33 PM
Last Updated : 23 Aug 2022 09:33 PM

கோவை அரசுப் பள்ளி மாணவர்களின் விமான பயண கனவை நனவாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர்

கோவையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட கண்ணார்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்.

கோவை: கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்தில் உள்ளது சிக்காரம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணார்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்களின் விமான பயணக்கனவை நனவாக்கியுள்ளார், அந்த ஊராட்சி மன்றத்தலைவர் ஞானசேகரன்.

கோவையில் இருந்து கடந்த 20-ம் தேதி மாணவர்கள் சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். சென்னை விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். பின்னர், சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், பிர்லா கோளரங்கம், மெரினா கடற்கரை ஆகிய இடங்களை மாணவர்கள் சுற்றிப்பார்த்து விட்டு, அன்று இரவு ஏசி ரயில் பெட்டியில் மாணவர்கள் கோவை திரும்பினர்.

இதுதொடர்பாக ஞானசேகரன் கூறும்போது, “ஏழை மக்களுக்கு விமானத்தில் பயணிப்பது என்பது எட்டாக்கனி. எனவே, மாணவர்கள் மட்டுமல்லாது அவர்களின் பெற்றோரில் ஒருவரையும் விமானத்தில் அழைத்துச் செல்ல முடிவு செய்தேன். அதன்படி, 10-ம் வகுப்பு மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என 55 பேரை அழைத்துச் சென்றேன். இந்த கல்வி சுற்றுலாவின் போது மாணவர்களுக்கு 3 வேளை உணவு, 2 வேளை சிற்றுண்டி போக்குவரத்து செலவு என தலா ஒருவருக்கு சுமார் ரூ.6,500 வரை செலவானது.

ஆனால், மாணவர்களுக்கு கிடைத்த எல்லையில்லா மகிழ்ச்சிக்கு முன் இந்த தொகை ஒரு பொருட்டே இல்லை. கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதியும் இதேபோல 56 பேரை அழைத்துச் சென்றேன். வரும் செப்டம்பர் 10-ம் தேதியும் ஒருமுறை மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என 55 பேரை அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

மாணவர்களில் ஒருவரான தினேஷ் கூறும்போது, “விமான பயணம் புதுவித அனுபவமாக இருந்தது. ஓடுதளத்திலிருந்து விமானம் மேல்நோக்கி எழும்பியபோது பயமாக இருந்தது. தரையிறங்கும்போதும் வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது" என்றார்.

உத்வேகம் அளித்த பயணம்

ஆசிரியர் பிரேமா கூறும்போது, “எங்கள் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது காரமடை, வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பாக பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் என 14 பேரை இந்த முறை அழைத்துச் சென்றோம்.

ஒரே பயணத்தில் பேருந்து, ரயில், விமான பயண அனுபவங்களை மாணவர்கள் பெற்றனர். வெளி உலக அனுபவத்தை தெரிந்துகொள்ளவும், எதிர்காலத்தில் தங்கள் சொந்த செலவில் மாணவர்கள் இதுபோன்ற பயணிக்கும் அளவுக்கு உயர வேண்டும் என உத்வேகம் அளிக்கும் வகையிலும் இந்த பயணம் அமைந்தது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x