Published : 13 Aug 2022 06:49 AM
Last Updated : 13 Aug 2022 06:49 AM

‘கேட்’ தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த சென்னை ஐஐடி சார்பில் இலவச இணையதள முகப்பு: ஆன்லைன் மூலம் உதவிகள் கிடைக்கும்

சென்னை: ‘கேட்’ தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்த இலவச இணையதள முகப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

சென்னை ஐஐடி, அமெடியஸ் லேப்ஸ் ஆகியவை இணைந்து, ‘கேட்’ தேர்வுக்கு 10 லட்சம் பேரை கட்டணமின்றித் தயார்படுத்தும் வகையில் ‘என்பிடிஇஎல் கேட்’ என்ற பெயரில் ஆன்லைன் போர்டல் (இணைய முகப்பு) தொடங்கி உள்ளது. ‘என்பிடிஇஎல்’ என்பதுஐஐடிக்கள், ஐஐஎஸ்சி ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில், கட்டணமின்றி ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை வழங்கும் திட்டமாகும்.

ஐஐடிக்கள், ஐஐஎஸ்சி ஆகியவற்றில் முதுநிலைப் படிப்பு அல்லது பிஎச்.டி படிப்பில் சேரவும், ஏனைய புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கவும் நாடு தழுவிய அளவில் நுழைவுத் தேர்வாக பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு (கேட்) இருந்து வருகிறது.

பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் ‘கேட்’ மதிப்பெண் அடிப்படையிலேயே வேலைக்கு நபர்களை நியமிக்கின்றன. எனவே மாணவர்கள் தங்களை ‘கேட்’ தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள http://gate.nptel.ac.in. என்ற இலவச இணையத் தொடர்பை பயன்படுத்தலாம் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

மேலும், ‘கேட்’ பாடத்திட்டத்தின் அடிப்படையில் வீடியோ தீர்வுகள்,செய்முறைத் தேர்வுகள், ஆன்லைன் உதவிகள் ஆகியவை புதிய இணையதள முகப்பு மூலம் வழங்கப்படுகிறது என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. இந்த இணையதளத்தில், முதல் பதிப்பு அக்டோபர் 2021-ல் தொடங்கப்பட்டு, ‘கேட்’ தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அடுத்த ஆண்டு ‘கேட்’ தேர்வை 9 முதல் 10 லட்சம் மாணவர்கள் எழுதக்கூடும் என்பதால், நாடு முழுவதும் தேர்வுக்குத் தயாராவோருக்கு இந்த இணையதளம் உதவிகரமாக இருக்கும் என, சென்னைஐஐடியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, என்பிடிஇஎல் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணா பசுமார்த்தி தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x