Published : 05 Aug 2022 05:12 AM
Last Updated : 05 Aug 2022 05:12 AM

மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது - தமிழகத்தில் 6 பேர் பரிந்துரை

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 6 ஆசிரியர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அதன்படி நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வுசெய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களில் தகுதிபெற்ற நபர்களை விதிகளின்படி அந்தந்த மாநில அரசுகள் பரிந்துரைக்க வேண்டும்.

அதன்படி தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 6 ஆசிரியர்களை பள்ளிகல்வித்துறையின் மாநில தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்விவரம் வருமாறு:

ஏ.ஸ்டெல்லா அமலோற்பவ மேரி (தலைமை ஆசிரியை, திருப்பூர் ஜெய்வாய்பாய் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி), ராஜலட்சுமி ராமசந்திரன் (தலைமை ஆசிரியை, குண்டூர் சுப்பையா பிள்ளைதி.நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி), ஏ.முருகன் (பட்டதாரி ஆசிரியர், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி), ஆர்.ஜெரால்ட் ஆரோக்கியராஜ் (பட்டதாரி ஆசிரியர், கரூர் மாவட்டம், பில்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி), கே.பிரதீப் (பட்டதாரி ஆசிரியர், திருப்பத்தூர் மாவட்டம், பெருமாப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, கே.ராமச்சந்திரன் (இடைநிலை ஆசிரியர், ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி) ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான மதிப்பீடு நேர்காணல் தேசிய அளவில் தனி நடுவரின் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x