Published : 04 Aug 2022 07:31 AM
Last Updated : 04 Aug 2022 07:31 AM

மாணவர்கள் அக்.31-க்குள் சேர்க்கையை ரத்து செய்தால் முழு கட்டணத்தை திருப்பி தர கல்லூரிகளுக்கு உத்தரவு

சென்னை: கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் சேர்க்கையை ரத்து செய்தால் முழு கல்விக் கட்டணத்தையும் பிடித்தமின்றி திருப்பித் தரவேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து மாவட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு தாமதத்தால் ஜேஇஇ, சியுஇடி உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகள் தாமதமாகிவிட்டன. இதன் காரணமாக நடப்பு கல்வியாண்டில் (2022-23) உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை அக்டோபர் மாதம் வரை தொடரலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெற்றோர் எதிர்கொள்ளும் நிதிச் சிக்கலை தவிர்க்கும் வகையில் கல்லூரிகளில் சேர்ந்து பின்பு அக்டோபர் 31-ம் தேதிக்குள் சேர்க்கை ரத்து , இடப்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக படிப்பில் இருந்து வெளியேறும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உயர்கல்வி நிறுவனங்கள் எந்தவித பிடித்தமும் செய்யாமல் முழுமையாக திருப்பி அளிக்க வேண்டும்.

அதன் பின்னர் தேர்வு செய்த படிப்பை மாணவர்கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ரத்துசெய்தால் சார்ந்த பெற்றோர்களிடம் வசூலிக்கப்பட்ட முழு கட்டணத்தில் இருந்து அலுவல் கட்டணமாக ரூ.1000 மட்டும் கழித்துக் கொண்டு மீதித் தொகையை முழுமையாக திருப்பித் தரவேண்டும்.

கரோனா பரவலை கருத்தில்கொண்டு மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை திருப்பித் தருவது தொடர்பாக ஏற்கெனவே யுஜிசி வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://ugc.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x