

சென்னை: பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு நேற்றுடன் நிறைவு பெற்றது.
தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளன. இதற்கிடையே நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் 4.04 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதில் 2.96 லட்சம் பேர் பதிவுக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
இதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான சேர்க்கைப் பதிவும் நேற்றுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 2.12 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.68 லட்சம் பேர் பதிவுக்கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும், 1.56 லட்சம் பேர் அசல் சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளனர்.
இதற்கிடையே பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும் பதிவுக் கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றவும் நாளை (ஜூலை 29) வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.