Published : 23 Jul 2022 05:02 AM
Last Updated : 23 Jul 2022 05:02 AM

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் 2-வில் 92.71%, 10-ம் வகுப்பில் 94.4% மாணவர்கள் தேர்ச்சி

சென்னை: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதன்படி, 10-ம் வகுப்பில் 94.4 சதவீதம், பிளஸ் 2 தேர்வில் 92.71 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் நடப்பாண்டு 10, 12-ம்வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு, கரோனாவால் 2 பருவங்களாக நடத்தப்பட்டது. அதன்படி, முதல் பருவத் தேர்வுகள் கடந்த நவம்பர், டிசம்பரிலும், 2-ம் பருவத் தேர்வுகள் கடந்த ஏப்ரல், ஜூன் மாதங்களிலும் நடத்தப்பட்டன. தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன.

பிளஸ் 2 தேர்வை நாடுமுழுவதும் 15,079 பள்ளிகளைச் சேர்ந்த 14 லட்சத்து 35,336 மாணவ, மாணவிகள் எழுதினர். அதில் 13 லட்சத்து 30,662 (92.71%) பேர் தேர்ச்சிபெற்றனர். இது 2020-ம் ஆண்டைவிட 3.9 சதவீதம் அதிகம்.கரோனா பரவலால் 2021-ல் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மண்டல வாரியான தேர்ச்சியில் 98.8 சதவீதம் பெற்று திருவனந்தபுரம் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த 2, 3-ம் இடங்களில் பெங்களூரு (98.1%), சென்னை (97.79%) உள்ளன.

அதேபோல, 10-ம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் 22,731 பள்ளிகளைச் சேர்ந்த 20 லட்சத்து 93,978 மாணவர்கள் எழுதினர். அதில் 19 லட்சத்து 76,668 (94.40%) பேர் தேர்ச்சி பெற்றனர். இது 2020-ம் ஆண்டைவிட 2.9 சதவீதம் அதிகம்.

பத்தாம் வகுப்பிலும் மண்டல அளவில் திருவனந்தபுரம் 99.68 சதவீதம் பெற்று, முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (99.22%), சென்னை (98.97%)ஆகியவை 2, 3-ம் இடங்களைப் பிடித்துள்ளன.

பிளஸ் 2 தேர்வில் 33,432 பேரும், 10-ம் வகுப்பில்64,908 பேரும் 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.ஆரோக்கியமற்ற போட்டியைத் தவிர்ப்பதற்காக நடப்பாண்டு தேர்ச்சியில் முதல்3 இடங்கள் பிடித்த மாணவர்களின் விவரம்வெளியிடப்படவில்லை. தோல்வி அடைந்தவர்களுக்கான முன்னேற்றத் தேர்வுஆகஸ்ட் 23-ம் தேதி தொடங்கும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x