Published : 19 Jul 2022 04:29 AM
Last Updated : 19 Jul 2022 04:29 AM

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால், பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2022-23 கல்வி ஆண்டுக்கான பிஇ, பிடெக், பிஆர்க் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இணையதளத்தில் இதுவரை 1 லட்சத்து 76 ஆயிரத்து 155 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 605 விண்ணப்பங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட பொறியியல் படிப்புகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க ஜூலை 19-ம் தேதி (இன்று) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால், அந்த மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, அன்றைய நாளில் இருந்து மேலும் 5 நாட்கள் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசம் அனைவருக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x