Published : 30 Jun 2022 05:07 AM
Last Updated : 30 Jun 2022 05:07 AM

அரசுப் பள்ளிகளில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதிவரை பணிநீட்டிப்பு - அரசாணை வெளியீடு

சென்னை: பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா நேற்று வெளியிட்ட அரசாணை விவரம்: நடப்பு கல்வியாண்டு (2022-23) முதல் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் கல்வியாண்டின் இடையே வயது முதிர்வால் ஆசிரியர்கள் ஓய்வில் செல்ல அனுமதிக்கப்பட்டால் அந்தப் பணியிடத்தை உடனே பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.

இதையடுத்து கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுக்கு ஆசிரியர் இல்லாத நிலையை தவிர்க்கவும், மாணவர்களின் கல்வி நலன் கருதியும் முந்தைய ஆண்டுகளை போலவே ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் இறுதி வரை மறுநியமன அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்க வேண்டி பள்ளிக்கல்வி ஆணையர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த கருத்துருவை கவனமுடன் பரிசீலித்து மாணவர் நலன்கருதி 2022-23-ம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் கல்வியாண்டின் இடையே ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்களுக்கு இறுதி வேலை நாள்வரை தேவைக்கேற்ப மறுநியமனம் வழங்க அனுமதி தந்து ஆணையிடப்படுகிறது. இதுசார்ந்த வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x