

சென்னை: இந்தியாவில் மருத்துவம் பயில வாய்ப்பு தரக் கோரி, உக்ரைனில் பயின்ற மருத்துவ மாணவர்கள் சென்னையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரஷ்யா - உக்ரைன் போரால், உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் தமிழகம் திரும்பினர். மீண்டும் அவர்கள் படிப்பை தொடரமுடியாத நிலையில், மத்திய, மாநில அரசுகளின் உதவிக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவில் மருத்துவப் படிப்பை தொடர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் சென்னையில் நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக மாணவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட, உக்ரைன் எம்பிபிஎஸ் மாணவர்கள் - பெற்றோர் கூட்டமைப்பு சார்பில், புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் சாலையில் நடந்த இந்த போராட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர். செய்தியாளர்களிடம் கூட்டமைப்புபொதுச் செயலாளர் எம்.ஆர்.குணசேகரன் கூறியதாவது:
உக்ரைன் போர் காரணமாக, மருத்துவப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு, இந்திய மாணவர்கள் உடனடியாக நாடு திரும்பினர்.
வரும் செப்டம்பர் முதல் உக்ரைனில் படிக்க, அந்நாட்டின் மருத்துவக் கல்லூரிகள் அழைப்பு விடுத்துள்ளன. ஆனால், போர் முடியாதநிலையில், மாணவர்களை அனுப்பபெற்றோர் அச்சப்படுகின்றனர்.
எனவே, மாற்று ஏற்பாடாக இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடரவாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும்.இல்லாவிட்டால், உக்ரைன் நாட்டுபேராசிரியர்களை இங்கு வரவழைத்து, சிறப்பு வகுப்பு நடத்தவேண்டும். அல்லது வேறு நாடுகளுக்கு சென்று படிக்க அரசு உதவவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.