

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு மே 10 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8.3 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 9-ல் தொடங்கி 18-ம் தேதி முடிவடைந்தது.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் ஜூலை 7-ம் தேதி வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், ஜூன் 27-ம் தேதியே பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட அறிவிப்பில், ‘‘பிளஸ் 1 தேர்வு முடிவு வரும் 27-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதளங்களில் முடிவுகளை அறியலாம்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதேபோல, பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன்கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
முந்தைய ஆண்டுகளைப் போல, மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.