

சென்னை: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மேலாண்மைக் குழுக்களின் மறுகட்டமைப்புப் பணிகளை ஜூலை 2-ம் தேதி மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் புதிய எஸ்எம்சி குழுக்கள் ஏப்ரல், மே மாங்களில் ஏற்படுத்தப்பட்டன.
தொடர்ந்து, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஜூலை 2-ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்.
இது தொடர்பாக பெற்றோர்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும். இந்தப் பணிகளை கண்காணிக்க பொறுப்பு அலுவலர்களை நியமித்து, புகாருக்கு இடமளிக்காத வகையில் சிறப்பாக பணியை நடத்தி முடிக்க வேண்டும்.
இது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் தலையீடு இல்லாமல் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்யுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.